LATEST NEWS
“என்ன கொடுமை இது..! பஸ்ல ஏற வந்த பிச்சைக்காரரை எட்டி உதைச்ச கண்டக்டர்… வைரல் வீடியோவால் அதிரடி சஸ்பெண்ட்..!!”
கர்நாடக மாநிலம் பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தின் நெலமங்களா தாலுகாவில், பேருந்தில் ஏற முயன்ற பிச்சைக்காரரை எட்டி உதைத்த குற்றச்சாட்டின் பேரில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் செவ்வாய்க்கிழமை அன்று நடந்துள்ளது. பேருந்து நடத்துனரின் இந்த மனிதநேயமற்ற செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பிஎம்டிசி நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
பிஎம்டிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, சிவனப்பூர் பணிமனைக்குச் சொந்தமான பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவை நிர்வாகம் தீவிரமாகக் கருத்தில் கொண்டு, உடனடியாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நியாயமான முறையில் விசாரணை நடைபெறுவதற்காக நடத்துனர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த உண்மை நிலவரத்தைக் கண்டறிய பேருந்தின் சிசிடிவி காட்சிகள், பயணிகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை தீவிரமாக ஆய்வு செய்யப்படவுள்ளன.
இந்தச் சம்பவம் நெலமங்களா தாலுகாவில் உள்ள அரிசினகுன்டே பகுதிக்கு அருகே நடந்துள்ளது. பிச்சைக்காரர் ஒருவர் பேருந்தில் ஏற முயன்றபோது நடத்துனருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நடத்துனர் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதுகுறித்து அப்பகுதிவாசி ஒருவர் கூறும்போது, பிச்சைக்காரர் பேருந்திலிருந்து கீழே விழுந்ததைப் பார்த்ததாகவும், அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அருகில் இருந்த காவல்துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும் என்றும், அதை விடுத்து இப்படி எட்டி உதைத்தது முற்றிலும் தவறான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
