CRIME
நீயெல்லாம் மனுஷனா..? மனசாட்சியே இல்லையா.? போதைப்பொருள் பழக்கத்தால் நேர்ந்த கொடூரம்… பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தந்தை கைது..!!
ஹைதராபாத் குடிமல்காபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போதையில் இருந்த தந்தை தாக்கியதில் நான்கு வயது சிறுவன் அர்மான் பரிதாபமாக உயிரிழந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ்வே தூண் எண் 104 அருகே 4 நாட்களுக்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ளது. சல்மான் என்பவர் போதைப்பொருளைப் பயன்படுத்திய நிலையில், தனது 4 வயது மகன் அர்மானை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நிலோஃபர் மருத்துவமனைக்குச் சேர்க்கப்பட்டான்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள தந்தை மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
