LATEST NEWS
“நள்ளிரவு 2 மணிக்கு லிப்ஸ்டிக், காஜல் போடுறா” – மனைவியை மனநோயாளி எனக் கூறி விவாகரத்து கேட்ட கணவன்… கோர்ட் கொடுத்த அதிரடி ஷாக்..!!
கிரிடி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்குக் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஒரு நாள் நள்ளிரவு 2 மணி அளவில் கணவன் திடீரென கண்விழித்துப் பார்த்தபோது, அவரது மனைவி அலமாரிக்கு முன்னால் நின்று கொண்டு லிப்ஸ்டிக் மற்றும் காஜல் அணிந்து கொண்டிருந்துள்ளார். இந்த நள்ளிரவு மேக்கப்பைக் கண்டு தான் பயந்துவிட்டதாகக் கூறிய கணவன், தனது மனைவிக்குக் கடுமையான மனநலப் பாதிப்பு இருப்பதாகவும், திருமணத்தின் போது பெண் வீட்டார் இந்த உண்மையை மறைத்துவிட்டதாகவும் கூறி குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம், கணவனின் வாதங்களை முற்றிலுமாக நிராகரித்தது. ஒரு புதிய மணமகள் நள்ளிரவில் தன்னை அழகுபடுத்திக் கொள்வதோ அல்லது மேக்கப் போடுவதோ முற்றிலும் இயல்பான மற்றும் சாதாரணமான ஒரு விஷயம் தான் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், தகுதி வாய்ந்த மனநல மருத்துவரின் முறையான சான்றிதழ் அல்லது மருத்துவப் பதிவுகள் எதுவும் இல்லாமல் ஒருவரை மனநோயாளி என்று கூறி விவாகரத்து வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து கணவனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
வழக்கின் விசாரணையின் போது, உண்மைப் பின்னணியை மனைவி நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார். திருமணத்திற்குப் பிறகு கூடுதல் வரதட்சணையாக 2 லட்சம் ரூபாய் கேட்டுத் தனது கணவர் குடும்பத்தினர் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டார். கேட்கப்பட்ட பணம் கிடைக்காததால், தன்னை ஒரு மனநோயாளி எனப் பொய்க் குற்றம் சாட்டி, கடந்த 2017-ஆம் ஆண்டில் கணவர் வலுக்கட்டாயமாகத் தனது தாய் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு மறுநாளே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமன்ற சமரச மைய பேச்சுவார்த்தையின் போது மனைவியுடன் வாழ கணவன் மறுத்ததால், தனது சொந்தத் தவறைப் பயன்படுத்தி விவாகரத்து பெற அவர் முயல்வதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
